ஒரு வார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி 25–ந் தேதி அமெரிக்கா செல்கிறார் வெள்ளை மாளிகையில் ஒபாமா சிறப்பு விருந்து அளிக்கிறார்

புதுடெல்லி,
ஒரு வார கால சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி 25–ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அவருக்கு வெள்ளை மாளிகையில் ஒபாமா சிறப்பு விருந்து அளிக்கிறார்.
ஒபாமா அழைப்பு
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். குஜராத்தில் 2002–ம் ஆண்டு நடந்த இனக்கலவரங்களை தடுக்க முதல்–மந்திரியாக இருந்த மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவரது விசாவை 2005–ம் ஆண்டு ரத்து செய்த அமெரிக்கா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமராக பதவி ஏற்றபோது, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவருக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்ததுடன், அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார்.
மோடி, அமெரிக்கா பயணம்
அதை ஏற்ற பிரதமர் மோடி, வரும் 25–ந் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். 26–ந் தேதி அவர் நியூயார்க் போய்ச் சேருகிறார். மறுநாள் (27–ந் தேதி) நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் மோடி இந்தியில் பேசுகிறார். இதை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று உறுதி செய்தார். இதன்மூலம் ஐ.நா. சபையில் இந்தியில் பேசும் 2–வது இந்திய பிரதமர் என்ற பெயரை தட்டிச்செல்வார். ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியில்தான் பேசினார் என்பது நினனவு கூரத்தக்கது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது பிரதமர் மோடி, வங்காள தேச பிரதமர் சேக் ஹசீனா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தபோதும், இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு
அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயார்க் நகரில், மேடிசன் சதுக்க கார்டன் அரங்கில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள். 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ‘மிஸ் அமெரிக்கா’ அழகி நினா தவுலுரி, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரிசீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இதில் மோடி பேசுவதை 20 அமெரிக்க நகரங்களில் இந்தியர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளில் அமெரிக்க வாழ் குஜராத்திகள் முழு வீச்சில் இறங்கி உள்ளனர்.
வெள்ளை மாளிகையில் சந்திப்பு
29–ந் தேதி பிரதமர் மோடி, வாஷிங்டன் புறப்பட்டு செல்கிறார். அன்றே வெள்ளை மாளிகைக்கு செல்கிறார். அவரை ஜனாதிபதி ஒபாமா தனது தனிப்பட்ட விருந்தினராக கருதி வரவேற்கிறார். அவர் இரவு விருந்து அளித்து மோடியை சிறப்பிக்கிறார். இந்த சந்திப்பு மறுநாளும் (30–ந் தேதி) தொடர்கிறது.
அப்போது, இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், ராணுவ ஒத்துழைப்பு, சிவில் அணுசக்தி உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பது தொடர்பாக மோடியும், ஒபாமாவும் விவாதிக்கிறார்கள். 1990–ல் 5.6 பில்லியன் டாலராக (சுமார் ரூ.33,600 கோடி) இருந்த இரு தரப்பு வர்த்தகம், 2013–ம் ஆண்டு 63 பில்லியன் டாலராக (ஏறத்தாழ ரூ.3,78,000 கோடி) உயர்ந்தது. இப்போது மேலும் இதை அதிகரிப்பது பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
துணை ஜனாதிபதி விருந்து
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் விருந்து அளித்து கவுரவிக்கிறார்.
மோடியின் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதில் அமெரிக்க நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
மோடியை 9 ஆண்டு காலமாக புறக்கணித்து வந்த அமெரிக்கா இப்போது அதை முடிவுக்கு கொண்டு வந்து, அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment