Kerajaan


Recent Post

Friday, 31 October 2014

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் அமல் ரூ.8 முதல் ரூ.40 வரை அதிகரிப்பு தமிழகத்தில் மது விலை உயர்வு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை இன்று முதல் 8 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை உயருவதாக அரசு அறிவித்து உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

மதுவிலை உயர்வு

கடந்த ஆகஸ்டு 20-ந் தேதி இந்த மதுபான ரகங்களின் விலை உயர்த்தப்பட்டது. மதுவுக்கான ஆயத்தீர்வை உயர்த்தப்பட்டதால் இந்த நடவடிக்கையை அரசு அப்போது மேற்கொண்டது.

மதுபான உற்பத்தியாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது மது உற்பத்தியில் கூடுதல் செலவு ஏற்படுவதால், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும்படி மதுபான உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலையையும் அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது.

எவ்வளவு?

சாதாரண ரக மதுவின் 180 மி.லி. (குவாட்டர்) பாட்டில் விலை தற்போது ரூ.80-க்கு விற்கப்படுகிறது. அதன் விலை ரூ.8 உயர்ந்து இன்று முதல் ரூ.88-க்கு விற்பனை செய்யப்படும்.

தற்போது 160 ரூபாய்க்கு விற்கப்படும் சாதாரண மது அரை பாட்டில் விலை (ஆப்) ரூ.16 அதிகரிக்கப்பட்டு ரூ.176-க்கு விற்கப்படும். சாதாரண ரக முழு பாட்டில் (புல்) விலை 32 ரூபாய் கூட்டப்பட்டு உள்ளது. எனவே தற்போது ரூ.320 என்று விற்கப்படும் முழு பாட்டில் இனி ரூ.352 என்று விற்பனை செய்யப்படும்.

நடுத்தர ரகம்

நடுத்தர ரக மதுவின் குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 கூடி இருக்கிறது. இதுவரை ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நடுத்தர மது குவாட்டர் பாட்டில் இனி ரூ.100-க்கு விற்கப்படும். நடுத்தர மது அரை பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே 180 ரூபாய் என்று இதுவரை விற்கப்பட்ட அரை பாட்டில் இனி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படும். நடுத்தர மது முழு பாட்டிலின் விலையில் ரூ.40 கூட்டப்பட்டு உள்ளது. அதன் விலை ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்கிறது.

உயர் ரகம்

ரூ.100 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உயர்ரக மது குவாட்டர் பாட்டில் விலையில் ரூ.10 கூட்டப்பட்டு உள்ளது. ரூ.200 முதல் ரூ.360 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உயர் ரக மதுவின் அரைபாட்டில் விலையில் ரூ.20 உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரூ.400 முதல் ரூ.720 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உயர்ரக மது முழு பாட்டில் விலையில் ரூ.40 உயர்த்தப்பட்டு உள்ளது.

பீர் விலையும் உயர்வு

ரூ.200-க்கு அதிகமான விலை உள்ள குவாட்டர் பாட்டில்களுக்கு ரூ.20ம், ரூ.400-க்கு மேல் விலை உள்ள அரை பாட்டில்களுக்கு ரூ.40-ம், ரூ.800-க்கு மேல் விலையுள்ள முழு மது பாட்டில்களுக்கு ரூ.80-ம் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் மதுப் பிரியர்கள் விரும்பி குடிக்கும் பீரின் விலை பாட்டிலுக்கு ரூ.10 உயர்கிறது.

இந்த மது விலை உயர்வினால் தமிழக அரசுக்கு ரூ.1,000 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மது விலையின் புதிய பட்டியல், அனைவரும் பார்க்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வெளியே ஒட்டப்படும்.

கண்காணிக்க குழு

சரியான விலையில் மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு தற்போது மாவட்டம் தோறும் 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நடவடிக்கைகளை சோதனையிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொள் முதல் விலை உயர்வு

இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுவின் கொள்முதல் விலை, பெட்டிக்கு ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 48 குவாட்டர் பாட்டில்களைக் கொண்ட பெட்டி, 24 அரை பாட்டில்களைக் கொண்ட பெட்டி, 12 முழு பாட்டில்களைக் கொண்ட பெட்டி ஆகியவற்றுக்கு தலா ரூ.110 உயர்த்தப்படுகிறது. இதனால் ஒரு குவாட்டர் பாட்டில் மூலம் மது உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ.3 வரை லாபம் கிடைக்கும்.
Read more ...

லிட்டருக்கு ரூ.10 கூடுதல் ஆவின் பால் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது


சென்னை,
தமிழக அரசு சார்ந்த நிறுவனமான ‘ஆவின்’ மூலம் வினியோகிக்கப்படும் பால் விலை நவம்பர் 1–ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.10 அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த விலை உயர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்திவிட்டு, விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பால் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. திங்கட்கிழமை போராட்டம் நடத்த இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க., பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் போன்றவை பால் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தியுள்ளன. ஆனால் அரசு அறிவித்தபடி பால் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. பால் விலை உயர்வால் ஓட்டல்கள், டீக்கடைகளில் டீ, காபி விலையும் உயரும் என்று கருதப்படுகிறது. பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளும் விலை உயரக்கூடும்.
--–
பிட் பார்ஆல்
Read more ...

மானியம் அல்லாத கியாஸ் சிலிண்டர் விலை குறைந்தது

புதுடெல்லி,

மத்திய அரசின் மானியச் சலுகை அல்லாத வர்த்தக கியாஸ் சிலிண்டர் ஒன்று (14.2 கிலோ எடை கொண்டது), சென்னையில் ரூ.883-க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை 19 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி இனிமேல் ஒரு சிலிண்டரின் விலை ரூ.863.50 ஆகும். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததால், இந்த விலை குறைப்பு செய்யப்பட்டது.

டெல்லியில் ஒரு சிலிண்டர் விலை ரூ.865 ஆகவும், மும்பையில் ரூ.887, கொல்கத்தாவில் ரூ.905 ஆகவும் விலை குறைந்தது. இதேபோல 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கியாஸ் சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.1,665, டெல்லியில் ரூ.1,449, மும்பையில் ரூ.1,540, கொல்கத்தாவில் ரூ.1,532 ஆக விலை குறைக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த ஜூன் முதல் இதுவரை 20 சதவீதம் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Read more ...

ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்பு: சிறிது தூரம் ஓடி உற்சாகப்படுத்தினார்

புதுடெல்லி,

வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் நடந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு சிறிது தூரம் ஓடினார்.

தேசிய ஒருமைப்பாட்டு தினம்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுபவர், சர்தார் வல்லபாய் பட்டேல். அவர், நாடு சுதந்திரமடைந்தபோது பிரிந்து கிடந்த 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒன்றாக இணைத்து நாட்டின் ஒற்றுமைக்கு வித்திட்டவர் ஆவார். அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதி தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

மேலும் பட்டேலின் 139-வது பிறந்த நாளன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமைக்கான ஓட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. டெல்லியில் ராஜபாதை விஜய் சவுக்கில் இருந்து இந்தியா கேட் வரையில் இந்த ஓட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

உறுதி மொழி

தேசிய ஒற்றுமைக்கான இந்த ஓட்டம் விஜய் சவுக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காலை நடந்தது.

இதையொட்டி இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சிறுவர்களும் அதிகாலையில் இருந்தே கூடத்தொடங்கினர்.

பிரதமர் மோடி விழா மேடைக்கு சரியாக காலை 7.45 மணிக்கு வந்தார். அப்போது அங்கே கூடியிருந்தவர்கள் பாரத மாதா வாழ்க என்று உற்சாக குரல் எழுப்பி அவரை வரவேற்றனர்.

8 மணி அளவில் விழா மேடையில் இருந்தவாறே மோடி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசிக்க அங்கே கூடியிருந்தவர்கள் அதனை திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

அதன்பின்னர் மோடி கொடியை அசைத்து ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண்ஜெட்லி ஆகியோரும் அருகில் இருந்தனர்.

பிரதமர் ஓடினார்

அப்போது அங்கே கூடியிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீங்களும்(மோடி) இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதனால், அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மேடையை விட்டு கீழே இறங்கிய மோடி கூடியிருந்தவர்களுடன் சேர்ந்து ஓடத் தொடங்கினார். சிறிது தூரம் வரை அவர் ஓடினார்.

இதனால் அத்தனை பேரும் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக ஓடினர். இந்த ஓட்டத்தில் பிரபல விளையாட்டு வீரர்கள் சுஷில்குமார், விஜேந்தர் சிங், வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர் போன்றோரும் கலந்து கொண்டு ஓடினர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மோடி பேசும்போது 1984-ம் ஆண்டு 31-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை வேதனையோடு குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது:-

ஒருமைப்பாட்டுக்கு விழுந்த அடி

சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் ஒற்றுமைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டவர். துரதிர்ஷ்டவசமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறந்த நாளன்று நமது நாட்டின் சொந்த மக்களே கொல்லப்பட்டனர்.

அப்போது நடந்த சம்பவங்கள் நமது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அடியாக விழுந்தது. இது ஒரு சமூகத்துக்கும் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை. நாட்டில் பல நூறு ஆண்டுகளாக நம்மிடையே இருந்த வந்த ஒருமைப்பாட்டில் கத்தியை பாய்ச்சுவதைப் போல் அது அமைந்து விட்டது.

சாணக்கியம்

தனது அரசியில் வாழ்வில் எத்தனையோ தடைகளைச் சந்தித்தாலும் பட்டேல் தேசிய ஒருமைப்பாட்டின் மீதான பார்வையில் இருந்து எப்போதும் விலகியதில்லை. நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்ட அவருடைய பிறந்த நாளன்று 30 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்றதொரு துயரமான சம்பவம் நடந்தது, துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்ததும் அது மேலும் பல்வேறு பகுதிகளாக பிளவு படவேண்டும் என்று ஆங்கிலேயேர்கள் விரும்பினார்கள்.

ஆனால், பட்டேலின் சாணக்கியம் பிரிந்து கிடந்த பகுதிகளையெல்லாம் ஒன்றாக்கியது. நாட்டில் இருந்த 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை அவர் ஒன்றாக இணைத்து மிகப்பெரிய சாதனையை படைத்தார்.

பட்டேல் இன்றி காந்தி இல்லை

மகாத்மா காந்திக்கும், பட்டேலுக்கும் இருந்த பாசப் பிணைப்பு மிகவும் உறுதியானது. காந்தியின் தண்டி யாத்திரை வெற்றிகரமாக நடந்தேறுவதற்கு திட்டமிட்டுத் தந்தவர், வல்லபாய் பட்டேல் ஆவார்.

எப்படி விவேகானந்தர் இன்றி ராமகிருஷ்ண பரம்ஹம்சர் முழுமை அடைந்து இருக்க மாட்டார் என்று நமக்கு தோன்றுகிதோ, அதேபோல் வல்லபாய் பட்டேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை அடைந்து இருக்க மாட்டார் என்றே நமக்குத் தோன்றுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக டெல்லி பட்டேல் சவுக்கில் உள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலியும் செலுத்தினார்.

ஜனாதிபதி மாளிகையில் விழா

இதேபோல் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலை நேற்று 8.15 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள், ராணுவ படையினர் மற்றும் டெல்லி போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read more ...

ஒரு மாதத்தில் ஏ.டி.எம். மையத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தலா ரூ.20 கட்டணம்: புதிய நடைமுறை இன்று முதல், சென்னை உள்பட 6 நகரங்களில் அமல்

புதுடெல்லி,

வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம். மையத்தில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தாலும், பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் இனி தலா ரூ.20 பிடித்தம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை இன்று(சனிக்கிழமை) முதல் சென்னை, டெல்லி உள்பட 6 பெரு நகரங்களில் அமலுக்கு வருகிறது.

ஏ.டி.எம். வசதி

வங்கிகளில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் தற்போது தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்தில் எத்தனை முறைவேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. அதற்கு எந்த பணமும் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இதேபோல் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் என்றால் இவர்களால் 5 முறை வரை பணம் எடுக்க முடியும். இதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் இதுவரை தலா ரூ.20 பணம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

ஏ.டி.எம். மூலம் பெறப்படும் இருப்புத்தொகை பற்றிய சிறு அறிக்கையை பெறுவதற்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.

புதிய முறை

கடந்த ஆகஸ்டு மாதம் இந்திய ரிசர்வ் வங்கி, நவம்பர் 1-ந்தேதி (இன்று) முதல் இதில் புதிய நடைமுறையை கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்தது.

அதன்படி இன்று (சனிக்கிழமை) முதல், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களுடைய வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே எந்த வித கட்டணமும் இன்றி பணம் எடுக்க இயலும்.

அதற்கு மேல் பணம் எடுத்தால் அதற்கேற்ப ஒவ்வொரு முறைக்கும் தலா ரூ.20 பிடித்தம் செய்யப்படும். இருப்புத்தொகை பற்றிய சிறு அறிக்கையை பெறுவதற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

6 பெரு நகரங்களில் அமல்

அதேநேரம், குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் வேறொரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணப்பிடித்தம் இன்றி 3 முறை மட்டுமே இனி பணம் எடுக்க முடியும். இதற்கு மேல் எடுத்தால், பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் தலா ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.

இதேபோல் வங்கிக் கணக்கு வைத்திராத வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் 3 முறைக்கு மேல் இருப்புத்தொகை பற்றிய சிறு அறிக்கையை பெற்றாலும், ஒவ்வொரு முறையும் தலா ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.

இந்த புதிய நடைமுறை முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர் ஆகிய பெருநகரங்களில் அமலுக்கு வருகிறது.

வங்கிகள் சங்கம் முறையீடு

புதிய ஏ.டி.எம். எந்திரங்களை பொருத்துதல், அவற்றின் பராமரிப்பு செலவு, அடிக்கடி பணம் எடுப்பதால் ஏற்படும் உட்கணக்கு பரிமாற்றம் போன்ற பிரச்சினைகளை காரணம் காட்டி இந்திய வங்கிகளின் சங்கங்கள் முறையிட்டதன் பேரில் இந்த நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி முடிய நாட்டில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ...

இந்திரா காந்தி நினைவு தினத்தை பிரதமர் மோடி புறக்கணித்தாரா? காங். குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா மறுப்பு


புதுடெல்லி,

இந்திரா காந்தி நினைவு தினத்தை பிரதமர் மோடி புறக்கணித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஜனாதிபதி அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது நினைவு தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள சக்தி ஸ்தலில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவு தினத்தையொட்டி சக்தி ஸ்தலில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. மேலும் நிகழ்ச்சியொன்றில் இந்திரா காந்தி நிகழ்த்திய உரையும் ஒலிபரப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியை சேர்ந்த மோதிலால் வோரா, வீரப்ப மொய்லி, சுசில்குமார் ஷிண்டே, அகமது படேல், பூபிந்தர் சிங் ஹூடா, குலாம் நபி ஆசாத், திக்விஜய் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

படேல் பிறந்த தினம்

இந்தநிலையில் முதல் உள்துறை மந்திரியும், இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமும் நேற்று கொண்டாடப்பட்டது. இதை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடிய மத்திய அரசு, நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டத்தை நடத்தியது.

இதையொட்டி வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, டெல்லியில் நடந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது நவீன இந்தியாவின் சிற்பியாக வல்லபாய் படேல் விளங்கியதாக புகழாரம் சூட்டினார்.

மோடி பங்கேற்கவில்லை

ஆனால் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. இந்திரா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் ஒருவர் அஞ்சலி செலுத்தாதது, இதுவே முதல் முறையாகும். பா.ஜனதாவை சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த போதுகூட, இந்திரா காந்தியின் நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் பிரதமர் மோடி நேற்று காலையில் தனது ‘டுவிட்டர்’ இணையதள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளில், அவரை நினைவுகூரும் நாட்டு மக்களுடன் நானும் இணைந்துள்ளேன்’ என்று கூறியிருந்தார். மேலும் ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போதும், ‘இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள்’ என்று நினைவு கூர்ந்திருந்தார்.

இந்திராவுக்கு அவமரியாதை

சக்தி ஸ்தலில் அஞ்சலி செலுத்துவதை மோடி தவிர்த்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரதமர் மோடியை காங்கிரசார் குறைகூறியுள்ளனர். இது குறித்து டெல்லி மேல்-சபையின் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா ‘‘இது ஒரு மிகவும் கீழ்த்தரமான, பாகுபாடான செயல். நாட்டுக்காக தனது உயிரை ஈந்தவர்களுக்கு, குறிப்பாக தேச ஒற்றுமைக்காக தன்னையே அர்ப்பணித்த இந்திரா காந்திக்கு செலுத்தும் அவமரியாதை ஆகும் என்றார்.

பா.ஜனதா பதில்

ஆனால் காங்கிரசின் குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது. இது குறித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறும்போது, ‘எந்த ஒரு தலைவரின் முக்கியத்துவத்தையும் சிறுமைப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. இந்திய வரலாற்றில் ஒவ்வொரு தலைவருக்கும் இடமுண்டு. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இந்தியாவின் மிகப்பெரும் தலைவர்களில் சர்தார் படேல் ஒருவர். சுதந்திர போராட்ட வீரரான அவர், இந்தியாவை ஒருங்கிணைத்தார்’ என்று தெரிவித்தார். 
Read more ...

போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது

ஐதராபாத்,

ஐதராபாத்தில் போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த ஐ.டி. நிறுவன ஊழியரை சைபராபாத் போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வாலிபர் டேட்டாபேஸ் புரோகிராமராக பணியாற்றி வந்துள்ளார்.

திரிபுரனெனியை சேர்ந்த சிவ கிருஷ்ணா என்பவர் போலி தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அவர், போலி தகவலில் பெண் ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனையடுத்து பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சிலர் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட தன்னை பிரன்ட்ஸ் - ஆக சேர்த்துக் கொள்ளுமாறு பேசி தொந்தரவு கொடுத்துள்ளனர். எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனது செல்போன் எண், போலி பேஸ்புக் கணக்கில் தெரிவிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார் சிவ கிருஷ்ணாவை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவலை குற்றவாளி, வேலைவாய்ப்பு தொடர்பான இணையத்தள டேட்டாபேஸில் இருந்து எடுத்துள்ளார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சிவ கிருஷ்ணா, புகார் அளித்த பெண்ணின் செல்போன் எண்ணை கண்டதும், அழைப்பு விடுத்து பேசியுள்ளார். எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். ஆனால் பெண் பதில் அளிக்கவில்லை. பெண் பதில் எதுவும் கூறாத நிலையில் எரிச்சல் அடைந்த சிவ கிருஷ்ணா அவரது செல்போன் எண்ணை கொண்டு போலி பேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை போன்றே தகவல்கள் பரிமாறிக் கொண்டுள்ளார்," என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ...

Like Us

Contact Form

Name

Email *

Message *